மேற்கு ஜேர்மனியின் சோலிங்கன் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் 01 முதல் 08 வயது வரையான தனது 5 குழந்தைகளைக் கொன்ற 27 வயதான தாய் தானும் தற்கொலைக்கு முயன்ற பயங்கர சம்பவம் நேற்று இடம்பெற்றது.
குழந்தைகளைக் கொன்ற தாய் டுசெல்டார்ஃப் ரயில் தண்டவாளத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்ற நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோலிங்கன் நகரின் இருந்து சுமார் 37 கிலோமீற்றர் தூரத்தில் வசிக்கும் குழந்தைகளின் பாட்டி குழந்தைகள் ஆபத்தில் உள்ளதாக அவசர தொலைபேசி எண் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்தே சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்தபோது அங்கு 5 குழந்தைகள் சடலங்களாகக் காணப்பட்டனர்.
ஜேர்மன் செய்தி இணையதளமான bild.de வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி சடலங்களான மீட்கப்பட்ட ஐந்து குழந்தைகளும் ஒன்று முதல் எட்டு வயது வரையானவா்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இதே குடியிருப்பில் இருந்த 11 வயதான ஆறாவது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் தாயிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் பின்னரே சிறுவர்களின் மரணங்கள், அவற்றுக்கான காரணங்கள் குறித்த தகவல்களைத் தெரிவிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.